Friday, July 2, 2010

கற்பனை ஊர்திகள்


    பிரபஞ்சத்துக்குள் ஒரு பயணம்.நட்சத்திரங்களின் ஒளி கண்களைக் கூசியது.கிரகங்கள் ஆதவன் இட்ட கட்டளைப்படி முறைத்தவறிச் செல்ல முயலாமல் அதனதன் பாதையில் சுழன்றுக்கொண்டிருந்தன.போகிறேன் பயணம்.இதுவரை என் வண்டியில் கோளாறு ஏதுமில்லை.வண்டிச் சக்கரமும் உறுதியுடன் இருந்தது.என் வண்டி மிதமான வேகத்திலே சென்றுக்கொண்டிருந்தது.என்னையும் முந்திக்கொண்டு நிறைய பேர் போய்க்கொண்டிருந்தனர்.       வழக்கம்போல் அன்றும் ஊர்திகள் அதிகமாய்ப் புழங்கிக்கொண்டிருந்தன.ஆசைகள் அதிகமாகிவிட்டதால் ஊர்திகளும் அதிகமாகிவிட்டன.ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களைக் காண்கிறேன்.தினசரி வருபவர்கள் கூட புதுமையாகத்தான் தெரிகிறார்கள் நித்தம் ஒரு ஆசைகளைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதனாலோ.சிலரின் ஊர்திகளில் சக்கரம் தேய்ந்த்தாலும், பெட்டியின் உறுதியின்மையாலும் ஆங்காங்கே பயணத்தைத் தொடரமுடியாமல் நின்றுக்கொண்டிருந்தன.அவர்களைப் பார்த்தப் பின்பு என் ஊர்தியிலும் ஏதாவது கோளாறு இருக்குமோ,இப்படி அவர்ளைப் போல் நானும் ஒரு நாள் பயணத்தைத் தொடர முடியாமல் பேதளித்து நிற்பேனோ என்ற சந்தேகம் எழுந்தது.அதேகணம்,அவர்கள் செய்த தவறின் காரணமே அந்த ஊர்திகளில் ஏற்பட்ட கோளாறுகள்.அவர்கள் தங்கள் ஊர்திகளை முறையாகக் கவனிக்க தவறிவிட்டார்கள்.அதன் விளைவே இன்று அவதிப்படுகிறார்கள் என்றும் மனதில் தோன்றியது.      மனதில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தூக்கி கடுகளவும் சாம்பலும் மிஞ்சக்கூடாது எனவெண்ணி அதனை சூரியனிடம் வீசியெறிந்தேன்.அது ஆதவனின் சிரசில் விழுந்துக் கருகிப்போனது. மனதுக்குள் பெரும் இன்பம்.அரக்கனை அழித்ததைப் போல் மகிழ்ந்துப் பெருமிதம் கொண்டேன்.அவ்மகிழ்ச்சியில் சிறிது நேரம் திளைத்திருந்தாலும் பயணத்தைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தமிருப்பதுச் சிந்தனைக்குள் உதித்த்து.கால்கள் படபடத்தன.குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணத்தை நிறுத்தியாக வேண்டுமே!ஆகவே பயண நேரம் முடிவதற்குள் விரைந்துச் செல்ல ஊர்திக்குக் கட்டளையிட்டேன்.அது முன்பைவிட கொஞ்சம் வேகமுடனே செல்ல ரம்பித்தது. இடையூறுகள் பல வென்று  இறுதியில் என் இலக்கை அடைந்தேன்.ஒரு சிறுக்கடை,அதனுள் பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள்,ஆடைகள்,பித்தளைப் ஆபரணங்கள் என நேற்றே உள்ளே நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டுத்தான் வீடு திரும்பினேன்.இன்று கொண்டு வந்த தோள்பைகளையும் கடையின் ஒருப்பக்கத்தில் தொங்கவிட வேண்டும்.இன்றைய நாள் நிறைய பெண்மக்கள் வந்துப்போய்க்கொண்டியிருக்கிறார்கள் .கண்டிப்பாக என் கடைப்பக்கம் வருவார்கள்.அதில் பத்துப்பேராவது என்னுடைய பொருட்களை வாங்காமலா போய்விடுவார்கள்? அடே...........நினைத்த மாத்திரத்திலே என் கடையை நோக்கிப் பெண்கள் கூட்டமாக வருகிறார்களே!இறைவா வருகிறவர்கள் அனைவரும் ஏதாவது பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமே, அருள் பாளியும் ஐயா!மனதுக்குள் இறைவனை உருகிப் பிராத்தித்தேன்.அப்பெண்களில் சில பேர் பிரிந்துப் பக்கத்துக் கடைக்குள் சென்றனர்.மீதமுள்ளோர் என் கடைக்குள் நுழைந்தனர்.அனைத்துப் பெண்களின் முகத்திலும் மகிழ்ச்சி வழிந்தது.சிலருக்கு தாங்கள் இத்தனை நாள் தேடியப் பொருள் கிடைத்ததில் மகிழ்ச்சி,சிலருக்குத் தேடியப் பொருள் கிடைக்காவிடினும்,அதற்கு இணையான,இன்னும் சிலருக்கு முற்றிலும் புதுமையான பொருட்கள் கிடைத்ததில் ஆனந்தம்.அதில் ஒரு பெண், "சிறுக்கடையாகயிருந்தாலும் நல்ல பொருளும் இருக்கு,அதிக விலையும் இல்லாம இருக்கு.முன்னமே அங்கு போனதுக்குப் பதிலாக இங்கு வந்திருக்கலாம்." அதைக் கேட்டவுடன் எனக்குள் பெருமிதம் கொண்டேன்.என் முயற்சி விழலுக்கு இரைத்த நீரைப்போல வீணாகிப் போகாமல் பயனளித்திரக்கிறது.சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோம் என்பதினால் சற்று மெலிந்திருந்த தன்னம்பிக்கையும் தானே ஊக்கமானது.என் பிராத்தனையும் பலித்து. இன்றைய வியாபரத்தில் நல்ல வருமானம் கண்டேன்.அப்பப்பா,என்ன  கூட்டம்! பக்கத்துக் கடைக்குப் போனவர்களும் கூட பிறகு என் கடைக்கு வந்தமையால் அச்சிறுக்கடை நெரிசலாகிப் போனது.ஒற்றை ஆளாக என்னால் அவர்கள் எல்லோரையும் சமாளிக்க இயலவில்லை.நாளை முதல் கடையில் ஒரு பணியாளை அமர்த்த வேண்டுமென எண்ணி,கடையின் முன்புறம் விளம்பர அட்டையை ஒட்ட் வைத்துவிட்டு என் ஊர்தியில் இல்லம் திரும்பினேன். காலை மணி ஐந்து.அலாரத்தின் சத்தம் காதைப் பிளந்தது.பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தம் அதையும் மிஞ்சியது.அற்புதமான கனவுலகிலிருந்து மீண்டு வர எண்ணமில்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தேன்.உண்மையாக ஊன் உயிருடன் நான் வாழும் உலகத்தைப் பார்த்தேன் சன்னல் வழி.அதிகாலையிலேயே எதிர்வீட்டு கணவன் மனைவியின் கூச்சல்.விடியல் வரை இரவு விடுதியில் இருந்து விட்டு வந்த கணவனுடன் மனைவி சண்டையிட்டுக்கொண்டியிருந்தாள்.குடிப்போதையில் கணவனும் ஏகமாணதாய் மனைவியைத் திட்டித் தீர்த்தான்.அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இருவர் பள்ளிப் பேருந்திற்காக,அந்த அதிகாலைப் பொழுதில் சாலையோரம் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களை  வேடிக்கைப்    பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அறைக்கதவு திறக்கும் சத்தம்.நித்திரைக் கலையாத விழிகளுடன் அம்மா நின்றுக்கொண்டிருந்தார்."எழுந்திட்டியா?சீக்கிரம் கிளம்பு. இன்னிக்கு.........அக்கா,வேலைக்கு அரைநாள் விடுப்பு எடுத்திருக்கு." "நல்லாதா போச்சு,அக்காயிருந்தா........அந்த 'இந்தெரியர் டிசைனர்' கிட்ட பேச வசதியாயிருக்கும்.அவன் எட்டு மணிக்கு வர்ற சொல்லியிருந்தான்.அதுக்குள்ள கிளம்பியாகணும்.அடுத்த மாசம் நம்ப கடையைத் திறக்கப்போ,எல்லோரும் பார்த்து அசர்ற மாதிரி அவனை வடிவமைக்கச் சொல்லனும்மா."                        

                 
 

    
 


 

                            


 

Monday, May 10, 2010

வயிற்றெரிச்சல்


வறுமை காணாத வருமானம்
கணவனுக்கு,
கோயிலுக்கே வந்தாலும் கழுத்தை விட்டு இறங்காத
நகைகள் மனைவிக்கு,
நினைத்தவுடன் வந்து சேரும் புத்தம் புது
பொருட்கள் வீட்டுக்கு,
ஆள் நடமாடும் தெருவிலும் விருட்டென போகும்
வாகனம் திமிருக்கு,
அனைவரும் வியக்கும் அளவு அபரீத
முன்னேற்றம் அவர்களுக்கு,
இருந்தும் அக்கம் பக்கத்தில் துரும்பே வாங்கினாலும்
போவார்கள் மாந்திரீகத்துக்கு!

நட்சத்திரங்களுள் நாம்

வட்டநிலா அழகுதான்,
வளம் கொண்ட நட்சத்திரம் இல்லாவிடினும்,
ஓராயிரம் தாரகைதான் ஒரு வானில் வீற்றிருப்பினும்,
ஒற்றைச் சந்திரன் ஒளியை மிஞ்சிவிடுமோ?

வட்ட வட்டமாய் ஆயிரம் நிலாக்கள்,
ஒரு வானம் சேர்ந்தாலும்,
கண்கள்தான் காண சகிக்குமோ?

வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கென கோணங்கள்
நிலையில்லாயிருக்கும்,
நட்சத்திரம் இல்லாவிடில் வானம்தான்,
முழுமைபெறுமோ?

இதில் நிலாக்களாய் பிறர் இருக்கலாம்,
நட்சத்திரங்களுள் நாமிருக்கலாம்,

தாழ்வெண்ணம் வேண்டாம்,
பெருமிதம் கொள்ளுங்கள்,
பூமிக்கு விளக்காய்
நாமும் இருந்திருக்கிறோம்.

தமிழ்

தமிழா,தமிழா......தமிழா திகைத்துப் போனாயோ?
அழைத்தக் குரலில் அறியாதொரு மொழிக்கேட்டாயோ?
அறிந்தே அறியாதவன் போல் சென்றாயோ?
எதற்கையா மேடைக்கூத்தாடிப் போல் தினமொரு நாடகம்?
உண்மையாய் ஒரு விடயம் சொல்கிறேன்,
எச்சில் பட்டு நுனிநாக்கு நனைப்பதல்லவே மொழி,
உன்னைக் காக்கும்,உன் பரம்பரைக் காக்கும்,
உன் மானம் நழுவாமல் தமிழது காக்கும் – தமிழனே
வேடம் களை,தொன்மைத் தொட்ட தமிழைத் திளை,
அவசியமில்லை உன் உரிமைக்கு உதிரம் நரபலி நாளை.

உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு

வெறும் சதை போர்த்திய இப்பூத உடல் மட்டும் மனிதனாக முடியுமா?பதில் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது.பகுத்தறிந்து வாழ்க்கையை நிர்ணயிக்கத் தெரியாத ஒருவன் மனிதனாக வாழ்ந்துதான் என்ன பயன் விளையப்போகிறது.அவன் எதற்கும் உபயோகமற்ற சடப்பொருளாகத்தான் பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவான். ஒருவனை முழுமைப்பெற்ற மனிதனாக்குவது இலட்சியங்களே.இலட்சியங்கள் தாம் அவரவர் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.வாழ்ந்தற்கான அடையாளமும், வாழ்வற்கான உந்துதலும் நம் இலட்சியங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

இலட்சியங்களை நோக்கிப் பயணிக்கும் வேளையில் சூழும் எதிர்ப்புகள் யாவும் நம்மை மேன்மேலும் பண்பட்ட மனிதனாக்கும்.நம்மில் பலர் வாய் வார்த்தைகளால் அடுத்தவரை வறுத்தெடுப்பவர்களுக்கு அஞ்சி,இன்னும் கொத்தடிமைகளைப் போல் வாழ்ந்து வருகின்றனர்.எல்லோரும் அவரவர்களுக்குத் தெரிந்த்தைத்தான் சொல்வார்கள்,செய்வார்கள்.அதற்காக கோவில் மாட்டைப்போல் தலையாட்டிக்கொண்டு,அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராயாமல் உடனே செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை.ஆயிரம் பேர் ஆலோசனைச் சொன்னாலும் இறுதி முடிவு நம்முடையதாகத்தான் இருக்க வேணடும்.நாளை ஆலோசனைச் சொன்னவர்கள் யாரும் அதன் விளைவைச் சந்திக்கப் போவதில்லை,நாம் தான் மனக்குழப்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளிலும் சிக்கித்தவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இவற்றைத் தவிர்க்க நமக்கு தேவை திடமான மனதும் தீர்க்கமான இலட்சியமும்தான்.மற்றவர்கள் உங்கள் முளையைச் சலவைச் செய்ய அனுமதிக்காதீர்கள். எடுத்த முடிவில் பிடிவாதமாக இருங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னாரென்று உங்கள் முடிவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.அது நீங்கள் கொணேடிருக்கும் இலட்சியத்தில் தளர்வை ஏற்படுத்தும்.உங்கள் முன்னேற்றம் இரண்டடி தூரத்திலிருக்கும் போது,அதை ஒரு மைல் தூரத்திற்குத் துரத்தியடிக்க இதைத் தவிர மிகச் சிறந்த வழி வேறொன்றம் தேவையில்லை.இது ஒன்றே போதும்.தன்னைத்தானே கல்லில் கட்டிக்கொண்டு பசிபிக் சமுத்திரத்தில் மூழ்கிய கதைதான். இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளைத் தம் மாணவர்களிடம் கொடுத்து பிழைதிருத்தம் செய்யச் சொன்னார்களாம் சில வங்காள ஆசிரியர்கள்.பின்னாளில் இவர்களே இரவிந்திரநாத் தாகூருக்கு ஆசியாவிலே முதன் முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதும் அவரைப் போற்றிப் புகழ்ந்தனராம்.

இப்படித்தான் நம் இலட்சியங்களுக்குப் பலர் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.
அதற்கெல்லாம் துளியளவும் மசியாதீர்கள்.ஆயிரம் தடவைச் சிந்தியுங்கள். ஆணித்தரமாய் முடிவெடுங்கள்.அதன்படியே செயல்படுங்கள்.ஆழிக்காற்றே வீசினாலும் முயற்சியை கைவிடாதிர்கள்.இக்கணமே உயிர் கொடுங்கள் உங்கள் இலட்சியங்களுக்கு, நாளை உலகம் புகழும் நீங்கள் உன்னதமான மனிதரென்று.